உறையூர், சமயபுரம் கோவில்களில் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்…
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அம்மனை தரிசனம் செய்து தங்கத்தேர் இழுத்தார்.
நேற்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கார் மூலம் பழனி சென்றார். அங்கு பழனி பால தண்டாயுதபாணியை தரிசனம் செய்துவிட்டு பின்னர் கார் மூலம் திருச்சி வந்த துர்கா ஸ்டாலின் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து இரவு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முதலில் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்கு சென்றவர் அங்குள்ள கொடி மரத்தை வணங்கினார். பின்னர் மூலஸ்தானம் மாரியம்மனை வணங்கி வழிபட்டார். கோவில் குருக்கள் பூரண கும்பம் மரியாதை அளித்து சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினர். பின்னர் கோயில் உள் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் தங்கத் தேர் இழுத்து அம்மனை வழிப்பட்டார். தங்கத்தேர் கோயில் உள் பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து. பின்னர் கோயிலுக்கு வந்த பெண் பக்தர்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்ற துர்கா ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு சென்றார்.