சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 11 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
சிறுமியை பாலியல் தொல்லை செய்த நபருக்கு 11 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் திருச்சி மகிளா நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 28.11.2019-ந்தேதி பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர், புதுத்தெருவை சேர்ந்த கணேசன் (52) என்பவர் அதே தெருவைச்சேர்ந்த 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை கலர் பென்சில் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில், மேற்படி எதிரியின் மீது கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் எதிரியான திருச்சி பீமநகரைச் சேர்ந்த கணேசன் (52) என்பவர் மறுதினமே கைது செய்யப்பட்டு, கடந்த 07.02.2020-ந்தேதி எதிரி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்ரீவத்சன் விசாரணையை முடித்து இன்று 26.04..2023-ம்தேதி, மேற்படி எதிரி கணேசன் என்பவருக்கு சிறுமியை சட்டத்தை மீறி கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000/- அபராதமும், சிறுமியை அடைத்து வைத்த குற்றத்திற்காக 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000/- அபராதமும், பாலியல் தொல்லை செய்ததற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், ஆக மொத்தம் 11 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதம் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் அருள்செல்வி அரசு சார்பாக ஆஜராகி வாதாடினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள்ஜோதி மற்றும் புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா பாரட்டினார்.