திருச்சியில் கத்தியை காட்டி நகை பறித்த வாலிபர் – 5 ஆண்டு தண்டனை வழங்கிய திருச்சி நீதிமன்றம்!
கடந்த 2014ம் ஆண்டு திருச்சி உறையூர் பகுதியிலுள்ள நாச்சியார் பாளையத்தில் செயல்படும் காமராஜர் கல்வி கூடத்தில் பணிபுரியும் காயத்ரி மற்றும் அவரது உதவியாளர் தூயமலர்மார்டினா என்கிற இரண்டு பேர் கல்வி கூடத்திற்குள்
இருந்தனர். அப்போது திடீரென புகுந்த ஒரு மர்ம நபர் இரண்டு பேரிடமும் கத்தியை காட்டி மிரட்டி காயத்ரி அணிந்திருந்த 2பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் வளையல்கள், மற்றும் மற்றொரு நபரான தூயமலர் மார்டினாவிடம் 2 பவுன் தங்க சங்கிலி என இரண்டு பேரிடம் இருந்து 5பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு கழிவறையில் வைத்து பூட்டி விட்டு தப்பி ஓடினார்.

பின்னர் இருவரும் கழிவிலிருந்து சப்தம் கொடுக்கவே இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டனர். இது குறித்து காயத்ரி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த உறையூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கத்தியை காட்டி நகைகளை பறித்து சென்ற திருச்சி கே.கே.நகர் தேவராயர் நகரை சேர்ந்த லியோ என்கிற ரொனால்டு ரோஸ்லியோ(39) என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாந்தி பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த லியோ (எ) ரொனால்டு ரோஸ் லியோ என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து லியோ திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.