விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு
திருச்சி, செப். 23 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக ஒப்பந்த தொழிலாளர்களான சின்ன சேலத்தைச் சேர்ந்த பிரபு மற்றும் புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்த ரவி ஆகிய இருவரும் பாதாள சாக்கடைக்குள் இறங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதலில் இறங்கிய பிரபு தடுமாறி கீழே விழுந்ததை தொடர்ந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ரவி என்பவர் பின் தொடர்ந்து இறங்கி உள்ளார் இருவரும் உள்ளேயே மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த இருவரையும் மீட்டு உடற்கூறாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருவரம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.