மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு 10 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கிய தன்னார்வ அமைப்பு
திருச்சி, ஆக.7 மணப்பாறையில் தாய்பால் வார விழாவை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு 10 லிட்டர் தாய்பால் தானம் வழங்கிய தன்னார்வ அமைப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மணப்பாறை, அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கங்கள் மற்றும் தனியார் மருத்துவமனையின் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தாய்மார்கள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்காக வந்துள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்தும் அதனால் குழந்தைகளுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்தும் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தாய்ப்பால் குறித்த சந்தேகங்களை போக்கும் வகையில் மகப்பேறு சிகிச்சையில் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் தாய்மார்களிடம் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சேகரிக்கப்பட்ட 10 லிட்டர் தாய்ப்பால் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது.
மேலும் குழந்தை பெற்ற தாய்மார்கள் 100 பேருக்கு ஊட்டச்சத்து பவுடர், பழம், டவல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுதொகுப்பும் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.