திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற அலுவலகத்தில் நலிவடைந்த மேடை இசைக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எம்எல்ஏ கதிரவன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவடைந்த மேடை இசைக் கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் எம்எல்ஏ கதிரவன் ரூ.1 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை 65 மேடை இசை கலைஞர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

இதில் மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளையில் உள்ள இசைக்கலைஞர்கள் 65 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து எம்எல்ஏவுக்கு தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
