ஆன்லைன் வர்த்தகத்தில் வாலிபரிடம் ரூபாய் 7.5 லட்சம் மோசடி
திருச்சி ஜூன் 27- திருச்சி லால்குடி அருகே உள்ள டால்மியாபுரம் கோவண்டக்குறிச்சி ஆரோக்கியநாதபுரம் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் டேவிட் ராபின்சன் (வயது 41. )
இவரை ஸ்டாலின் ராஜ் என்பவர் அணுகி தான் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாகவும், ரூபாய் 22 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூபாய் ஒரு லட்சமாக திருப்பி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பிய டேவிட் ராபின்சன் கடந்த 2022-ல் ரூபாய் ஏழு லட்சத்து 27 ஆயிரம் பணத்தை நேரடியாகவும் கூகுள் பே மூலமும் வழங்கியுள்ளார். ஆனால் ஸ்டாலின் ராஜ் கூறியபடி ஓராண்டு கழித்து, லாபமும் தரவில்லை. பின்னர் பலமுறை அவரை சந்தித்து கேட்டபோது காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 21 ந்தேதி ஸ்டாலின் ராஜி டேவிட் ராபின்சன் சந்தித்து தான் முதலீடு செய்த பணத்தை கொடுக்குமாறு கேட்டார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஸ்டாலின்ராஜ் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட டேவிட் ராபின்சன் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா, ஸ்டாலின் ராஜு மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.