லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் காயம்
திருச்சி, ஏப். 13 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொணலையில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் லாரி டிரைவர் அப்பாத்துரை(35) .இவர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவா(46) சென்னையிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சமயபுரம் அருகே கொணலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மதுரை மாவட்டம் திருமால் நகரை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் ஜெயபிரகாஷ்(28), தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 44 வயதான கோமதி கவிதா, இவரது கணவர் சேவுகப் பெருமாள்(48) ,சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பெலிக்ஸ் பிரேம் ஆனந்த் (52) , விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியைச் சேர்ந்த பெருமாள்சாமி(24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (33) ,கோபி(25), சிந்து(28) , சந்திரசேகர்(31), சின்ன பொண்ணு (55), கடலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஆகிய 11 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.