ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் 19 பவுன் நகை திருட்டு – போலீசார் விசாரணை!
திருச்சி திருவானைக்கோவில் கணபதி நகர் வித்யாலயா சாலையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஆர்எஸ்எஸ் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஊருக்கு வந்திருந்த மகளை கடந்த 4ஆம் தேதி சென்னையில் விடுவதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். செல்லும்போது முத்தரசநல்லூரில் உள்ள சகோதரர் ஸ்ரீதரிடம் வீட்டை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 19 பவுன் நகைகள், 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் இருந்த 4,350 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.