கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது முதல் தகவல் அறிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள 43 இடங்களில் அதிரடி சோதனையானது நடைபெற்று வருகிறது.
இதில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார் வீடு மற்றும் கிராப்பட்டி அன்பு நகரில் உள்ள அவரது நெருங்கிய நண்பர்களான ராஜமன்னார், பாப்பா காலனியில் உள்ள தர்மலிங்கம் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் 22 அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் உதயகுமார் வீட்டில் 960 கிராம், தர்மலிங்கம் வீட்டில் 820 கிராம் மற்றும் 3 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக சோதனையில் ஈடுபட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.