திருச்சி மாவட்டத்தில் கஞ்சா – குட்கா விற்ற 5 பேர் கைது
திருச்சி, மே 11 திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாகப் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வாத்தலை அருகே தெற்கு சீதாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் சாந்தியாகு தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றபோது, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முசிறி பகுதியைச் சேர்ந்த மாதவன் (வயது20) மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபேஷ்குமார் (வயது20) ஆகிய இருவரைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், திருவெறும்பூர் பகவதிபுரம் பகுதியில் கஞ்சா விற்ற அர்ஜுன் (வயது26) என்பவரைத் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா விற்ற 2 பேர் கைது
லால்குடி அருகே பெருவளப்பூரில் உள்ள பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்ற தீபா (வயது45) என்பவரைக் கே.கே.நல்லூர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்,துறையூர் அருகே ஜம்புநாதபுரம் போலீசார் நடத்திய சோதனையில், தண்ணீர்பந்தல் பகுதியில் ஹான்ஸ் விற்ற மாரிமுத்து (வயது39) என்பவர் கைது செய்யப்பட்டார்.