திருச்சியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது; போலீசார் விசாரணை
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அருகாமையிலுள்ள விவேகானந்தா நகர் வாத்தியார் குளத்திற்கு அருகே மளிகை கடையிலும்,அதன் எதிர்ப்புறம் உள்ள முட்புதரிலும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இரயில்வே ஊழியர்களும், அந்த பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பணியாற்றக்கூடிய விவசாயக் கூலித் தொழிலாளர்களும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளனர். இந்த ஒரு இடத்தில் மட்டும் தினசரி சுமார் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

திருச்சி மாநகர சரகத்துக்கு உட்பட்ட அரியமங்கலம் காவல் நிலையம், பொன்மலை காவல் நிலையம்,மாவட்ட புறநகர் பகுதியில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலையம் ஆகியவற்றில் எல்லையின் நடுவே இந்த இடம் அமைந்துள்ளது.
இப்பகுதி பொதுமக்கள் இது குறித்து காவல்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து செய்திகள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியானதை அடுத்து பொன்மலை காவல்துறையினர் இது தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாட்டரி சீட்டி விற்பனையில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்தும், லாட்டரி விற்பனையில் குழுவாக செயல்பட்டு வருபவர்கள் குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.