குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்த கிராமமக்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சீகம்பட்டி ஊராட்சியில் ஆலங்குளம் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியால் மிகவும் குறைந்தே இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது பெய்த மழையால் குளத்தில் நீர் நிறைந்தது. ஆனால் நீர் செல்ல வழியின்றி இருந்ததால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது.
பின்னர் அதிகாரிகளின் இருவேறு பகுதிகளில் வாய்க்கால் போன்று அமைத்து நீரை வெளியேற்றியதை அடுத்து நீர் குறைந்தது. இந்நிலையில் குளத்தில் இருந்து நீர் வெளியேறுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக மணப்பாறை தாசில்தார் சேக்கிழார், ஒன்றியக்குழுத் தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அந்த பகுதியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுமட்டுமின்றி குளத்தில் இருந்து நீர் வெளியேறுவதற்கான பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
இந்நிலையில் குளத்தில் குழுமி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நீர் பெருக்கெடுத்து அந்த பகுதிகளில் உள்ள வயல்களில் புகுந்து சென்றது. இதனால் வயல்களில் மணல் நிறைந்து பயிர்கள் நாசமானதுடன் வயல்களே அலங்கோலமாக காட்சி அளித்தது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஒன்றியக்குழுத் தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக குளத்தில் உடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி வாகனங்கள் செல்ல முடியாத குளக்கரையில் சற்று தொலைவில் இருந்து மணல் மூட்டைகளை நிரப்பி தங்களுடைய இருசக்கர வாகனங்களில் வைத்தே எடுத்து வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இளைஞர்கள் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் இந்த பணியில் ஈடுபட்டதுடன் பெண்களும் மணல் மூட்டைகளை தயார் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த பணி நீடித்ததைத் தொடர்ந்து அடைப்பு சரிசெய்யப்பட்டது.