பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு சாலையில் வீச்சு
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகில் சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு ஒன்று பையில் வைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் முசிறி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அபியூத் இளவரசன் மருத்துவ உதவியாளர் ஷீலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பச்சிளம் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் கல்நெஞ்சம் படைத்த தாய் குறித்து முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் குழந்தை பையில் வைத்து வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.