முன்விரோதம் காரணமாக கொலைசெய்ய முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது!
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவிர வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த 17.12.21-ந்தேதி தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாஸ்திரிரோடு RMM டீ கடை அருகில், தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காதர்மொய்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேற்படி வழக்கின் குற்றவாளியான காதர்மொய்தீன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவருகிறது. எனவே எதிரி தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரி காதர்மொய்தீன் என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.