திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் தோட்டத்தில் வசித்து வருபவர் முத்துவேல்(வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு சாந்தகுமார்(வயது 36), முரளிதரன்
என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் மூத்தமகன் சாந்தகுமார் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இளையமகன் முரளிதரன் மனைவியுடன் தந்தையுடன் வசித்து வருகிறார். முரளிதரன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் அவரது தந்தை வீட்டிற்கு பிரசவத்திற்காக தற்போது சென்றுள்ளார். இந்தநிலையில் மூத்த மகன் சாந்தகுமாருக்கும்,

தந்தை முத்துவேலுவிற்கும் சொத்து பிரித்து பணம் கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னையிலிருந்து வந்த சாந்தகுமார் வீட்டில் தூங்கிகொண்டிருந்த தந்தை முத்துவேலிடம் தகாத
வார்த்தைகளால் திட்டியும் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு சாந்தகுமாரை கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.