தபால் சேவை குறைதீர் முகாம்; புகார் அனுப்ப 31ம் தேதி கடைசி!
திருச்சி தலைமை தபால்நிலையத்தில் ஏப்.12ம் தேதி தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. இதற்காக புகார்களை வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அஞ்சல்துறை தலைவர் அறிவித்துள்ளார். இது குறித்து அஞ்சல்துறைத்தலைவர் கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
திருச்சி தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில்
திருப்தியடையாதவர்களுக்கு மட்டுமான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஏப்.12ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வரும் 31ம் தேதிக்குள் புகார்களை அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பும் புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண் பணவிடை (மணியாடர்), துரித தபால்,
பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட வேண்டும். புகார் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்மந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி,
பணம் கட்டிய முழுவிபரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும். குறைகள் குறித்த புகாரை ராஜகோபாலன், உதவி இயக்குநகர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம் (தமிழ்நாடு) திருச்சி-620001. செல்.94439 79004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் தபால் சேவை
குறைதீர்க்கும் முகாம் மார்ச் 2022 என குறிப்பிடவேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் கூகுள்மீட் அழைப்பு மூலமாக நடக்கும். அதற்கு செல்போன் எண், இ மெயில் முகவரி மற்றும் அருகில் இருக்கும் அஞ்சல் முகவரி ஆகிவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.