திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
திருச்சியில் செயல்பட்டு வரும் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் ரசாயன உரமாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றது. தற்போது விவசாய பயன்பாட்டிற்கு என நேரடி உரம், கூட்டுரம், கலப்புரம் போன்ற மரபான ரசாயன உரங்கள் தவிர்த்து தற்போது பயன்பாட்டில் உள்ள 100 சதவீதம் நீரில் கரையும் உரம், நுண்ணூட்டங்களுடன் செறிவுட்டப்பட்ட கூட்டுரம் போன்றவையும் விவசாய பயன்பாட்டில் உள்ளன. மேற்கண்ட அனைத்து வகையான ரசாயன உரங்கள், நேரடி நுண்ணூட்டங்கள், நுண்ணூட்ட கலவைகள் போன்ற உரங்களும் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த ஆய்வகத்தில் ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சேகரிக்கப்படும் ரசாயன உர மாதிரிகள் ஆய்விற்கு என பெறப்படுகின்றன. முக்கிய இடுபொருளான தரமான ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு கிடைப்பது ஆய்வக பணிகளின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.