சிறுகனூரில் பார்சல் லாரியில் தீ விபத்து
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூர் பெட்ரோல் பங்க் பகுதி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த பார்சல் லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் பார்சல் லாரி தீப்பிடித்தது. சமயபுரம், ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சென்னையில் இருந்து கார்மெண்ட்ஸ் மற்றும் மின்சாதன பொருட்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த நாராயணன் மகன் 50 வயதான தெய்வேந்திரன் ஓட்டி வந்துள்ளார். அப்போது காலை 7 மணியளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே பெட்ரோல் பங்க் ஒரத்தில் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக தெய்வேந்திரன் சென்றுள்ளார்.அப்போது பின்னால் வந்த லாரி பார்சல் லாரி மீது உரசி மோதியதில் பார்சல் லாரியின் பின் பக்கம் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து லாரி ஓட்டுநர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு திருச்சி மாவட்ட உதவி அலுவலர் பொறுப்பு கருணாகரன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி, நிலைய போக்குவரத்து திராவிடன், வீரர்கள் சதீஷ்குமார்,திவாகர், வெங்கடேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்றனர். மேலும் உதவிக்காக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திலிருந்து நிலைய போக்குவரத்து ஆரோக்கியசாமி, சிறப்பு அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ், வீரர்கள் மணிகண்டன்,கமல்ஸ்ரீ உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதில் லாரியில் இருந்த கார்மெண்ட்ஸ் மற்றும் மின்சாதன பொருட்கள் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்த அணைத்தனர்.