திருச்சி மாநகர காவல் ஆணையரின் நடவடிக்கையால் சாலை விபத்துக்களில் 14 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.
திருச்சி மாநகரில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்தும், அவ்விடங்களில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களை அதிகளவில் நடத்தியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் சீர்செய்யப்பட்டது.
அதன் காரணமாக இந்த வருடத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுநர்களை கண்டறிந்து இதுவரை 2,63,404 மோட்டார் வாகன வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், கடந்த 2021-ஆம் வருடம் 1,44,423 மோட்டார் வாகன வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகன விபத்துக்ளையும், போக்குவரத்து இடையூறுகளையும் தடுக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 82% வழக்குகள் அதிகரித்ததின் எதிரொலியாக 14% சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளது.
திருச்சி மாநகரத்தில், சாலை மரண விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறின்றி சீரக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவதை உறுதி செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.