மருத்துவமனைக்கு பூட்டு போட்டதால் போலீஸ் கமிஷனரிடம் டாக்டர் மனு
திருச்சி சங்கிலியாண்டபுரம் கவி மருத்துவமனை மற்றும் நியூரோ பவுண்டேஷன் நிர்வாக இயக்குனரான டாக்டர் ராஜ்பாஸ்கர்(48) என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் சங்கிலியாண்டபுரம் பகுதியில் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறேன். என்னுடன் பங்குதாரராக சேர்ந்த டாக்டர் ஒருவர், மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அவர் பங்காக பணம் எதுவும் செலுத்தாமல் புதிய மருத்துவ உபகரணங்கள் என்று கூறி பழைய மற்றும் சேதமடைந்த உபகரணங்களை மருத்துவமனைக்கு அவருடைய பங்கிற்காக கொடுத்தார். மேலும் அவர் பங்கிற்கு கொடுத்த உபகரணங்கள் அனைத்துமே சேதமடைந்து விட்டது. அதனை பயன்படுத்த முடியாமலும் மற்றவைகள் அனைத்தும் அடிக்கடி பழுது அடைந்து வந்தது.
கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனையில் போதிய லாபம் கிடைக்கவில்லை என்பதால் அவரின் குடும்ப தேவைக்காக தொழில் தேவைக்காகவும் பணம் தேவை என்பதாலும் மருத்துவமனையின் பங்குதாரர்களில் இருந்து அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக்கொண்டு விருப்பப்படியே மருத்துவமனையை விட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினார். தற்போது மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார். மருத்துவமனையில் நான் இல்லாத நேரம் பார்த்து உள்ளே புகுந்து சிகிச்சையில் இருந்த நோயாளிகளை வெளியே விரட்டி விட்டு மருத்துவமனையின் லேப் ரூம், எமர்ஜென்சி வார்டு உள்ளிட்ட பகுதிகளை பூட்டி விட்டு சாவியை எடுத்து சென்றுவிட்டார். அந்த டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.