டெல்டா விவசாயிகளின் நீர் பாசனத்திற்காக மே மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த மே 30-ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி வந்தார்.
தொடர்ந்து, உறையூர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் செல்வேந்தனின் வீட்டிற்கு சென்று உடல் நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் திருச்சி உறையூரில் இருந்து முதல்வரின் கார் சென்று கொண்டிருந்தது. அமைச்சரின் கார்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென முதல்வர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்லுமாறு உத்தரவிட்டார்.
திடீரென முதல்வர் மாநகராட்சிக்கு வருவதை அறியாத அதிகாரிகள் திகைத்து நின்றனர். சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர். தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் அங்கு கோப்புகள் பதிவேடுகளை ஆய்வு செய்தார். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த நகர் நல அலுவலர் டாக்டர்.யாழினியிடம் கோப்புகள் குறித்து கேட்டார்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில்களை கூறியதாகவும், கோப்புகள் சரிவர பராமரிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான முதல்வர் கோபமடைந்து சென்றுள்ளார்.
பின்னர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது…நகர் நல அலுவலர் மீது புகார்கள் உள்ளதாகவும், உயர் அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்தால் கூட அலட்சியமாக அதை எடுக்காமல் இருந்ததாகவும் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நகர் நல துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் திருச்சியின் நகர்நல அலுவலர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு செல்லும் வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…
மேலும் விசாரணையில் இவர் ஏற்கனவே புதுக்கோட்டையில் நகர்நல அலுவலராக இருந்தவர் என்பதும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தின் நிதி தொடர்பான கோப்புகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்று மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மாற்றப்பட்டுள்ளதும், அதற்கு பதிலாக வைத்தியநாதன் தற்போது புதிய ஆணையராக பொறுப்பேற்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.