பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு
திருச்சியில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து -விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழந்தார் 10 க்கும் மேற்பட்டோர் காயம்
திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அதன் காரணமாக அந்த பகுதியை கடக்கும் வாகனங்கள் மணிகண்டம் சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து தென்காசிக்கு 31 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மணிகண்டம் பகுதியில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்ததும் பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த விபத்தில் தென்காசியை சேர்ந்த சக்திவிக்னேஷ் (19) என்கிற இளைஞருக்கு இடது கால் துண்டானது. இதனைத் தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார் , மேலும் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுனர் மது போதையில் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார் இரண்டு கிரேன் உதவியுடன் பேருந்தை நிலை நிறுத்தினர். இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.