பிள்ளைகளிடம் அத்துமீறிய இரண்டாவது கணவர்- வெட்டி கொன்ற மனைவி…
முசிறி அருகே பெண் பிள்ளைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டாவது கணவனை, மனைவி கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபு (30). பண்ருட்டி அருகே உள்ள வேலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மனைவி சிந்து (34) பெயர் மாற்றப்பட்டுள்ளது. செங்கல் சூலையில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.தற்போது சிந்துவிற்கு 16 வயது 14 வயது 10 வயது என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பொன்னன் இறந்துவிட்ட நிலையில் சிந்து இவரது மூன்று குழந்தைகளுடன் தொடர்ந்து முசிறி பகுதியில் உள்ள பல்வேறு செங்கல் சூளைகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யம்பாளையம் அருகே சண்முகம் என்பவர் செங்கல் சூலையில் வேலை செய்த போது சிந்துவிற்கு பிரபுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவியாக கடந்த எட்டு வருடங்களாக செங்கல் சூலையில் வேலை செய்து கொண்டு ஒரே குடும்பமாக, குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3. 9. 2022 அன்று முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து சடலம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் விபரம் அறியப்படாததால் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரபுவின் தந்தை ஆறுமுகம் கடந்த நான்கு மாதங்களாக மகன் பிரபு குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை கண்டுபிடித்து தர வேண்டும், மகன் பிரபுவுடன் தொடர்பில் இருந்த ரேகா மற்றும் அவரது குழந்தைகளை விசாரிக்க வேண்டும் என முசிறி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் ரேகாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது இரண்டாவது கணவர் பிரபு தனது இரண்டு பெண் பிள்ளைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அதனை நேரில் பார்த்து கண்டித்தும் கேட்காததால் தலையில் அரிவாளால் வெட்டி தடியால் அடித்து கொன்று தான் வசித்த கூரை கொட்டகையின் பின்புறம் இருந்த காவேரி ஆற்றில் தள்ளிவிட்டதாக
சிந்து அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து பெண் காவலர்கள் மூலம் குழந்தைகள் தனியாக விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் ரேகாவின் பெண் குழந்தைகள் கூறிய தகவலை கேட்டு பெண் போலீசாரும், அது விபரம் அறிந்த போலீசாரும் கண் கலங்கினர். பிரபு மிகவும் மூர்க்கத்தனமாகவும், தகாத முறையில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து சிந்து சம்பவம் நடைபெற்ற அய்யம்பாளையம் அருகே உள்ள செங்கல் சூளைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு சிந்து நடந்த விபரங்களை நடித்துக் காட்டினார்.
காவிரி ஆற்றின் முட்புதரில் சிக்கியிருந்த பிரபுவின் கைலி போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து சிந்துவை கைது செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் , உருட்டுகட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கணவன் இறந்த நிலையில் இரண்டாவதாக வந்த கணவன் பிள்ளைகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் அவரை வெட்டி கொன்று காவிரி ஆற்றில் மனைவி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.