பாரதிதாசன் பல்கலை.யில் நான் முதல்வன் திறன் மேம்பாடு வழிகாட்டுதல் திட்டம்

0 277
Stalin trichy visit

திருச்சி, ஜன.30 திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நான் முதல்வன் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் இன்று (30.01.2023) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் “நான் முதல்வன்” என்ற முதலமைச்சரின் கனவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்” திட்டத்தை தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியினை சிறந்த முறையில் மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் இருந்து 8 மாவட்டங்களில் 450 பேராசிரியர்கள் இத்திட்டத்தில் பயிற்சி எடுக்க வந்துள்ளனர். இப்பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் மகாத்மாகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தி, 2 நிமிடம் மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம், பதிவாளர் எல்.கணேசன், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிங்கி ஜனார்த்தனன், பாரதிதாசன் பல்கலைக்கழக நான் முதல்வன் திட்ட இயக்குநர் பிரேம்குமார், மண்டல கல்வி இணை இயக்குநர்கள் திரு.குணசேகரன், திரு.எழிலன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.