ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவன் உயிரிழப்பு…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ரயில் நிலையம் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் தண்டவாளத்தில் தவறி விழுந்ததில் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள குடித்தருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் 14 வயதான நித்தீஷ்.இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் பிச்சாண்டார்கோயில் ரயில் நிலையம் அருகே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ரயில் வருவது தெரியாமல் ரயில் தண்டவாளத்தில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் ரயில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த திருச்சி ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.