ஏரி நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு…
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே கொனலையில் உள்ள பெரிய ஏரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுகனூர் அருகே கொனலை ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் 11 வயதான சூர்யா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அப்பகுதியில் கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டை முடித்துவிட்டு அங்குள்ள பெரிய ஏரியில் நண்பர்களுடன் குளிக்க சென்றனர். சூர்யாவுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் குளித்துக் கொண்டிருந்த சூர்யா எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பெரியஏரியில் இறங்கி நீரில் மூழ்கிய சூர்யாவை சடலமாக மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.