மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பைக் திருடன் தப்பி ஓட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தை திருடிய புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த மாதவன் ( 26), திருப்பூரைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (22) ஆகிய இரண்டு வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் கவனித்ததில் காயம் அடைந்த வாலிபர்கள் இருவரையும் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து போலீசார் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று கழிப்பறைக்கு சென்ற ஆகாஷ் குமார் ( 22) என்பவர் ஜன்னல் வழியாக கை விலங்குடன் தப்பியோட்டம். மணப்பாறை போலீசார் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடிய சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.