மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
திருச்சி, ஜூலை 27 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சூசைமாணிகம் (55). பருத்திப் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஆண்டவர் கோவில் செக்போஸ்ட் அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தனது தோட்டத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற தேவாலயத்தின் திருவிழாவிற்குச் சென்றுவிட்டார். இன்று காலை சென்று பார்த்தபோது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 சவரன் நகை மற்றும் ரூ 10 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.