சம்பா நடவு செய்யும் விவசாயிகள் மானிய விலையில் விதை நெல், இடுபொருள் பெற வேளாண் துறை அழைப்பு!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் சம்பா நடவு செய்யும் விவசாயிகள் மானிய விலையில் விதை நெல் இடுபொருள்கள் பெற்றுக்கொள்ள வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் எஸ்தர் பிரேமகுமாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது… திருவெறும்பூர் அதை ஒட்டிய பகுதிகளில் சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான ஏற்ற நெல் ரகங்கள் டி.கே.எம் 13, (125 – 130 நாட்கள்), கோ.ஆர் 50, என்.எல் ஆர், டிஆர்ஒய் ஆகிய நெல் விதைகள் வாழவந்தான் கோட்டை செயல்படும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், விதை கிராமத் திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல விதை நேர்த்தி செய்யப்படும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, மேலும் உயிர் கட்டுப்பாட்டை காரணியான சூடோமோனாஸ், ப்ளுரசன்ஸ் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகிறது.
திருவெரும்பூர் வட்டாரத்தில் சம்பா சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம் மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அணுகலாம்” என கூறியுள்ளார்