சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை-மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
மணப்பாறை அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்றவரும், மணல் திருட்டில் ஈடுபட்டவரும் கைது. டிராக்டர் மற்றும் மொபைல் போன் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் இருந்து பண்ணப்பட்டி செல்லும் சாலையில் அரசால் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த ராக்கம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (வயது 38) என்பவரை வையம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ஒருசெல்போன் மற்றும் 1300 ரூபாய் பணம் கைப்பற்றபட்டது.
இதேபோல் இனாம் ரெட்டியபட்டியில் உள்ள ஒட்டகுளத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய இனாம்ரெட்டியபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த துரைக்கண்ணு (வயது 45) என்பவரையும் வையம்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.