புத்தக திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, நவ. 15 திருச்சியில்”புத்தகத் திருவிழா” குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா வருகிற நவம்பர் 24 முதல் டிசம்பர் 04 வரை நடைபெற உள்ளது. இதற்காக செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் புத்தக அரங்குகள், தினசரி நடைபெறும் கருத்தரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், மேடை மற்றும் உணவு அரங்கம், அறிவியல் மையம் மற்றும் பல்வகை கண்காட்சி கூடம், அரசுத்துறை திட்ட விளக்க அரங்குகள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்களிடம் மற்றும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் திருச்சி ஆர்.சி பள்ளியில் புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி ஆர்.சி பள்ளி வளாகத்தில் தொடங்கி திருச்சி ரயில்வே ஜங்ஷன் பாரதியார் சாலை வழியாக பள்ளி சென்று அடைந்தது.
இந்நிகழ்வில் ஆர்.சி பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் டென்னிஸ் கில்பர்ட், அரசு அதிகாரிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்..