சாலை விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி, நவ. 15 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள துறையூர் சாலையில் மோட்டார் பைக்கில் சென்ற தச்சுத் தொழிலாளி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலீ வடக்கு தெருவை சேர்ந்தவர் 47 வயதான லோகநாதன்.இவர் தச்சுத் வேலை செய்து வந்துள்ளார். லோகநாதனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தீபாவளி அன்று இரவு திருவெள்ளறை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் திருப்பைஞ்ஞீலீ நோக்கி தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர் . அப்போது மண்ணச்சநல்லூர் இந்திரா நகர், 7 வது கிராஸைச் சேர்ந்த ரவிக்குமார் (35) காரில் பின்னால் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் திருச்சி துறையூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக லோகநாதன் சென்ற மோட்டார் பைக் மீது மோதியது. இதில் லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த லோகநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.