போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற தே.மு.தி.க. நிர்வாகி கைது
திருச்சி, டிச. 1 திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் ஞானசேகர் (54). இவர் கிரையம் பெற்ற காலி மனையை ஜெயராமன் என்பவருக்கு கிரயம் செய்து விற்பதற்கு தன்னுடைய மூலாதார பத்திரம் தொலைந்து விட்டதாகவும், இதுகுறித்து ஞானசேகர் முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசாரால் வழங்கப்பட்ட என்.டி.சி சான்றை பெற்று சம்பந்தப்பட்ட காலியிடத்தை ஜெயராம் என்பவருக்கு விற்பதற்காக முசிறி சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது ஆவணங்களை கொடுத்துள்ளார்.
அப்போது ஆவண வழிகாட்டு பதிவேட்டில் முசிறி சார்பதிவாளர் சரிபார்ததில், ஞானசேகரன் த/பெ பழனியாண்டி என்று மாற்றம் செய்திருப்பதாகவும், ஞானசேகர் தனது தந்தையின் பெயரை மாற்றி போலி ஆவணம் தயாரித்து வெளிநாட்டில் வசித்து வரும் வேறொரு நபருக்கு சொந்தமான காலி இடத்தினை பத்திரம் பதிவு செய்து விற்க முயற்சித்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து முசிறி சார்பதிவாளர் கோகிலா முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு ஞானசேகர்(54), பத்திர எழுத்தர் பாலசுப்ரமணி (57), அசோக்குமார்(47) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் முசிறி ஆணைப்பட்டியை சேர்ந்த ஜெயராமன் (33) (தேமுதிக முசிறி மேற்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார்) உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தேமுதிக நிர்வாகி ஜெயராமனையும் கைது செய்து முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.