சாலை விபத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பெண் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு
மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக பெண் மேற்பார்வையாளர் அவரது கணவர் மற்றும் கணவரின் தம்பி உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு.
திருச்சி, கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் கோபி (57). இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 51). இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். கோபியின் சகோதரர் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 47). இவர்கள் மூவரும் திருச்சியில் இருந்து சிவகாசியில் நடைபெற இருந்த தங்களது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இன்று காரில் சென்றனர். துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் அருகே உள்ள தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் சென்று கவிழ்ந்தது. இதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கண்ணன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் காரை ஓட்டி வந்த கோபி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம்குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.