“வாட்ஸ் ஆப்” கல்வி உதவித் தொகை செய்தி தவறானது : திருச்சி மாநகராட்சி ஆணையர்
திருச்சி, மே 16 “வாட்ஸ் ஆப்பில்” கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பான செய்தி தவறானது என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சியில் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதாக வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியினை மறுத்துள்ள மாநகராட்சி ஆணையர் சரவணன் திருச்சி மாநகராட்சி குறித்து வாட்ஸ் ஆப் குறுஞ் செய்தியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதாக நீதிமன்ற உத்தரவு எண். 20559/20215ன் படி வழங்குவதாக குறிப்பிட்டு செய்தி வரப்பெற்றுள்ளது. இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள நீதிமன்ற உத்தரவில் திருச்சிராப்பள்ளி, மருங்காபுரி தாலுக்கா, அக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் கோவில் திருவிழாவிற்கான காவல் துறை பாதுகாப்பு தொடர்பானதாகும். பொதுமக்களுக்கு அலைபேசியில் வந்துள்ள வாட்ஸ் ஆப் செய்தியில் குறிப்பிட்டுள்ள உதவித்தொகை தொடர்பான செய்தி தவறான செய்தியாகும்..மாநகராட்சி நிர்வாகத்தால் எந்தவித உதவித்தொகையும் வழங்குவதாக அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அனைவரும் உதவித்தொகை சம்பந்தமாக மாநகராட்சியை தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், உண்மையற்ற செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.