முசிறியில் நகை திருட்டு வழக்கில் இருவர் கைது
திருச்சி, ஜூன் 14 திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய பலே குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து நகை ,
வெள்ளிக்கட்டிகளை மீட்டனர்.மேலும் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முசிறியில் உள்ள தா.பேட்டை ரோட்டை சேர்ந்தவர் ராஜ் இவரது மகன் அழகு மணி (40 )இவர் மீது ரெண்டு கொலை வழக்கு மற்றும் இரண்டு மணல் கடத்தல் வழக்கும், உள்ளது. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர். இதேபோன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கொளக்குடி வன்னியர் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ரமேஷ் (40) இவர் மீது சுமார் 40 திருட்டு வழக்குகள் உள்ளன.அழகு மணி மற்றும் ரமேஷ் இருவருக்கும் இடையே சிறையில் ஏற்பட்ட பழக்கத்தில் நண்பர்களாக மாறினர்.
ஜாமினில் வெளிவந்த நிலையில் இருவரும் முசிறி பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டின்பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து ஜாலியாக செலவு செய்து சுற்றி வந்துள்ளனர். முசிறி பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வந்த நிலையில் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையை சேர்ந்தவர்கள் தீவிர விசாரணை செய்ததில் திருட்டு சம்பவத்தில் அழகுமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது
இதையடுத்து முசிறி போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு முசிறி பகுதியில் பதுங்கி இருந்த அழகு மணி மற்றும் ரமேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் இதில் இருவரிடம் இருந்து சுமார் 10 பவுன் தங்கநகை கட்டி மற்றும் 340 கிராம் வெள்ளி கட்டி கைப்பற்றப்பட்டது. விசாரணையில் பாரிவள்ளல் நகரில் அசோக் என்பவரது வீட்டில் திருடியது என்பதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில்இருவரையும் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.