திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு கிராமபுற பகுதிகளை இணைத்து விரிவுபடுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கருத்து கேட்கும் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் லால்குடி, முசிறி பேரூராட்சிகளை நகராட்சிகளாக உயர்த்துவது குறித்தும், கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்ட் உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

மாநகராட்சியோடு இணைக்க உள்ள சில கிராமங்கள் விவசாயத்தை
மட்டுமே நம்பி இருப்பதால் தங்களுக்கு இதில் இருந்து விலக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாநகராட்சி விரிவாக்கம் கண்டிப்பாக விதிகளுக்கு (Norms) உட்பட்டது. கிராமத்தில் 75% மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களாக இல்லை என்றால் மட்டுமே அந்த ஊரை சேர்க்க முடியும்.

மாநகராட்சியோடு ஒரு கிராமப்புற பகுதிகளில் இணைந்தால் பாதாள சாக்கடை, தரமான சாலைகள், உயர்மட்ட பாலங்கள் போன்ற பல்வேறு வசதிகள் கிடைக்கும். மொத்தம் 32 கிராமங்களில் 3 கிராமங்கள் விலக்கு கேட்டுள்ளனர். அதை பரிசீலனை செய்ய உள்ளோம். 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் என்கிற ஒரு வதந்தி மக்களிடம் நிலவி வருகிறது. கண்டிப்பாக விவசாய பணிகள் அதிகம் உள்ள ஊரை இணைக்க முடியாது. ஊரக வேலை திட்டம் இல்லாது போனால் கலைஞர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றார்.
