பள்ளம் தோண்டும் போது பழமையான துவாரபாலகர் கற்சிலை கண்டெடுப்பு
திருச்சி, பிப். 18 பள்ளம் தோண்டும் போது 10 அடி உயரமும்,2 அடி அகலமும் கொண்ட பழமையான துவார பாலகர் கற்சிலை கண்டெடுப்பு.
திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் மேற்கு கிராமத்தில் ச.கண்ணனூர் தேர்வு நிலை பேருராட்சி நிர்வாகத்தினர் மூலம் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜ கோபுரத்தின் அருகில் தெற்கு சன்னதி வீதியில் JCB மூலம் குழி தோண்டிய போது பழங்கால கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து பேருராட்சி நிர்வாகத்தினர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.அதன் பேரில் உடனடியாக வருவாய் ஆய்வாளர் கற்சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது சுமார் 10 அடி உயரமும்,2 அடி அகலமும் கொண்ட பழமையான துவாரபாலகர் சிலை இருந்தது. மேற்படி சிலை வருவாய் ஆய்வாளரால் கைப்பற்றப்பட்டு மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கற்சிலையை எடுத்து சென்று ஒப்படைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சமயபுரம் அருகே வெங்கங்குடி பகுதியில் சுரேஷ் என்பவரின் வீட்டில் தண்ணீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டிய போது 3 சிலைகளும்,பொருட்களும் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. சமயபுரம் பகுதியில் குடிநீர் தேவைக்காக பள்ளம் தோண்டும் போது பழமையான சிலைகள் கிடைத்து வருவதால் இப்பகுதியில் ஆச்சரியத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.