போலீஸ்காரர்களால் புதிதாக மூலிகைத்தோட்டம்; ஐ.ஜி. பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், போலீஸ்காரர்களால் புதிதாக மூலிகைத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகைத் தோட்டத்தினை, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி பங்கேற்று வரவேற்றார்.
மேலும் மூலிகைச்செடி ஒன்றினை அத்தோட்டத்தில் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நட்டார். திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கிவந்த காவலர் மருத்துவமனை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முயற்சியினால், ஆயுதப்படையில் உள்ள புதிப்பிக்கப்பட்ட காவலர் குடியிருப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதையும் மத்திய மண்டல ஐ.ஜி. திறந்து வைத்தார்.
மேலும், ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றும் போலீசார் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரத்தையும் அவர் இயக்கி வைத்தார். பின்னர் இறுதியாக மாவட்ட காவல் அலுவகத்திற்கு வருகை புரிந்து பார்வையிட்டார். பின்னர் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தி தக்க அறிவுரைகளை வழங்கினார்.