தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியை அடுத்த சோழபுரத்தில் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் திருமேனி அமைப்புக்குழு சார்பில் மாமண்னர் ராஜ ராஜ சோழனுக்கு பிரமாண்ட திருமேனி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மிக நடைபெற உள்ளது. 150 அடி பிரமாண்ட திருமேனி அமைக்கும் பணிகளுக்கு ஆதீனங்கள் தலைமை தாங்கி நடத்த உள்ளனர். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர்கள், மடாதிபதிகள், பல மதங்களை சார்ந்த குருமார்கள், தமிழக அமைச்சர்கள் போன்ற பலர் கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு இந்து எழுச்சி பேரவையின் சார்பில் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து எழுச்சி பேரவையின் தலைவர் பழ சந்தோஷ் குமார் கூறுகையில், மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு 150 அடி உயரத்தில் மிக பிரமாண்டாமாக சிலை அமைக்க உள்ளோம். எழுச்சிக்கான சிலை என்கிற தலைப்பில் இந்த சிலையை அமைக்க உள்ளோம்.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மாமன்னர் ராஜராஜ சோழனின் புகழை பறைசாற்றும் வகையில் இந்த சிலை அமையும், மிக முக்கியமாக சர்வ சமய குருமார்கள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது,நாகூர் தர்காவில் உள்ள குருமார்கள், தேவலாய பேராயர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். ரூ.12ல் இருந்து ரூ.15 கோடி மதிப்பீட்டில் அந்த சிலையை அமைக்க உள்ளோம். தமிழகம் முழுவதும் இதற்கான ரதம் ஒன்றை துவக்க உள்ளோம், மக்களிடம் நிதியும் பெற உள்ளோம்.

தமிழகத்தில் கடந்த 60 ஆண்டு காலத்தில் மா மன்னர்களின் மான்பை மறந்து விட்டோம். எனவே ராஜராஜசோழனின் மாண்பை பறைசாற்றவே இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த சிலை அமைய உள்ள இடத்தில் கலச்சார பூங்காக்கள், அருங்காட்சியகம் போன்றவை ஏற்படுத்த உள்ளோம், முழுக்க முழுக்க தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக இந்த இடம் அமையும் என்றார்.