தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறைந்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டும் முதல் கட்டமாக சிறப்பு ரெயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் கிட்டத்தட்ட 1½ ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறை-திருச்சி பயணிகள் ரெயில் வரும் 7-ந் தேதி முதல் சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு கும்பகோணம், பாபநாசம், தஞ்சை வழியாக காலை 9.45 மணிக்க திருச்சி வந்து சேரும்.
இதேபோல் மறுமார்க்கத்தில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறையை சென்று அடையும். பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை வழியாக மன்னார்குடி வரை செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலும் 7-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.