எடப்பாடி பழனிச்சாமியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை மனு
திருச்சி, ஆக.25 மக்களை காப்போம் தமிழகத்தில் மீட்போம் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதில் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி 3வது நாளான இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில் முனைவர்களை சந்தித்து உரையாடினார்.
அப்பொழுது தேசிய தென்னிந்திய நதிகளை இணைப்பு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அம்மனுவில்
விவசாயிகளுக்கு லாபகரமான விலையை மத்திய அரசு இடமிருந்து வாங்கித் தர வேண்டும்,
கோதாவரி காவிரி இணைக்க வேண்டும், காவிரி அய்யாறு போன்றவையை இணைக்க வேண்டும், காவிரியிலும் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கைகளை வழங்கினார்.
இதே போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு நிர்வாகி ராஜேந்திரன்
வழங்கிய அம்மனுவில்
வேளாண் பொருள்கள் தமிழக செலவினங்களை கணக்கில் கொண்டு நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு ஊக்கத்தொகையுடன் சேர்த்து தமிழக அரசு 3500 ஆக உயர்த்தி தர வேண்டும்,
கரும்புக்கான கொள்முதல் விலையை 4500 ஆக சர்க்கரை சத்துடன் சேர்த்து வழங்க வேண்டும்,
பால் கொள்முதல் விலையை ஊக்கத்தொகையுடன் சேர்த்து பசும்பால் லிட்டருக்கு 50ஆக எருமை பால் லிட்டருக்கு 55ஆகவும் உயர்த்தி தர வேண்டும்.
விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
சிறுதானிய மதிப்பு கூட்டுப் பொருள் தயாரிக்க விவசாயிகளுக்கு மகளிர் கூட்டுறவு சங்கம் மூலம் பயிற்சி அளித்து அரசே கொள்முதல் செய்து ரேஷன் பொது விநியோகத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும்.
வேளாண் மானியங்களை அரசு மாற்றி உழவு மானியம் மற்றும் உற்பத்தி சார்ந்த மானியமாக மாற்றி அமைக்க வேண்டும்.
உட்பட பல்வேறு கோரிக்கைகளை வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு விவசாயிகள் மற்றும் சிறு குழு தொழில் முனைவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி உரையாடல் மேற்கொண்டனர்.