மணப்பாறையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது
திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, புத்தாநத்தம், வளநாடு, துவரங்குறிச்சி உள்ளிட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் குளத்தில் சிலைகளை கரைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி மணப்பாறை அருகே புத்தாநத்தம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 13 விநாயகர் சிலைகளின் விஜர்சன ஊர்வலம் இன்று நடைபெற்றது.
புத்தாநத்தம், இடையபட்டி, மெய்யம்பட்டி, முத்தழகம்பட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 13 விநாயகர் சிலைகள் அனைத்தும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வைக்கப்பட்டு தாரை தப்பட்டை முழங்க மக்கள் புடை சூழ புத்தாநத்தம் கடைவீதி, இடையபட்டி வழியாக சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
ஊர்வலம் இடையபட்டி சுந்தரவிநாயகர் சென்றடைந்ததும் ஒவ்வொரு சிலைகளுக்கும் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு கோவில் குளத்தில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட எஸ்பி., செல்வநாகரெத்தினம் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.