மணப்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.20 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் : அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
திருச்சி, நவ.13 மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.20 கோடி மதிப்பில் புதிய கட்டிடம். அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பாரதியார் நகரில் காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி 2000 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதேபோல் விபத்து மற்றும் திடீர் உடல்நல்குறைவு போன்ற அவசர சிகிச்சைக்காகவும் மக்கள் வந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர அவசர சிகிச்சை பிரிவிற்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி இன்று தொடங்கியது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் கட்டிடத்திற்கான வரைபடத்தையும் அவர் பார்வையிட்டு கட்டுமானப்பணிகள் மற்றும் ஏற்படுத்தப்பட உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஶ்ரீரங்கம் பழனியாண்டி, மணப்பாறை அப்துல் சமது, மாவட்ட ஆட்சியர் சரவணன் கிழக்கு ஒன்றிய செயலாளர் SAS ஆரோக்கியசாமி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்