புத்தாநத்தம் அருகே நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்
திருச்சி, செப்.17 மணப்பாறையை அடுத்த மருங்காபுரியை சேர்ந்தவர் ராசு (வயது 30). இவரது தோட்டத்தில் துவரங்குறிச்சி வனத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அனுமதியின்றி ஒரு நாட்டு துப்பாக்கி (சிங்கள் பேரல்) வைத்திருந்தோடு, ஒரு துப்பாக்கி கட்டை, 150 கிராம் வெடி மருந்து, 40 பால்ரஸ் குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ராசுவை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கல்லுப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (38) என்பவர் காட்டுப்பகுதியில் கீழே கிடந்ததாக கூறி நாட்டுதுப்பாக்கியை கொடுத்தார். அதனை தோட்டத்தில் வைத்திருந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து இருவரையும் வனத்துறையினர் புத்தாநத்தம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு துப்பாக்கி கட்டை, 150 கிராம் வெடி மருந்து, 40 பால்ரஸ் குண்டுகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.