கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
திருச்சி மாவட்டம் நாகமங்கலத்தை சேர்ந்தவர் குஞ்சுபிள்ளை(வயது 60). இவர் கடந்த 29-ந் தேதி திருச்சியில் இருந்து ரூ.50 ஆயிரத்துடன் மணப்பாறையில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த பணத்தை தவறவிட்டு விட்டார். இது குறித்து குஞ்சுப்பிள்ளை மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தநிலையில் மணப்பாறை கண்ணுடையான்பட்டி குமாரப்பட்டியை சேர்ந்த ராஜீவ்காந்தி(39) பொருட்கள் வாங்குவதற்காக அதே கடைக்கு சென்றபோது, மணப்பாறை மான்போர்டு பள்ளி அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்தார்.
அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. இது குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, யாரும் உரிமை கோரவில்லை. உடனே பணத்தை மணப்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். உடனடியாக குஞ்சுப்பிள்ளையை போலீசார் தொடர்பு கொண்டு பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். ராஜீவ்காந்தியின் நேர்மையையும், சுயநலம் இல்லாத நற்செயலையும் பாராட்டி திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், ராஜீவ்காந்தியை குடும்பத்துடன் அழைத்து அவர்களுக்கு பணவெகுமதி, பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உடன் இருந்தார்.