குடிபோதையில் தடுமாறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி, பிப். 22 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் உள்ள கவுண்டம்பட்டி கீழூரில் மது போதையில் நடந்து சென்றவர் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி ஊராட்சியில் உள்ள கவுண்டம்பட்டிகீழூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(40). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் மாலை மது போதையில் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வீட்டின் அருகே தானாக தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் இரவு 11 மணி அளவில் வாந்தி எடுத்ததாக கூறி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.