மணப்பாறை அருகே தனியார் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
திருச்சி, மே 14 மணப்பாறை அருகே தனியார் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 15 பேர் லேசான காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற திருமண நிகழ்விற்காக 45 பேருடன் கன்னியாகுமரி சென்று விட்டு மீண்டும் நேற்று இரவு கள்ளக்குறிச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தது. பேருந்தை சின்னசேலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே முக்கன் பாலம் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தின் சென்று கிணற்று பகுதி அருகே பாய்ந்து நின்றது. இதில் பயணம் செய்த 15 பேர் லேசான காயமடைந்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.