முசிறி காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா
திருச்சி, ஆக.4 ஆடி 18 பண்டிகை முன்னிட்டு முசிறி பரிசல் துறை ரோடு காவிரி படித்துறையில் புதுமணத் தம்பதிகள், சுமங்கலி பெண்கள், ஒன்று கூடி காவிரி தாயை வழிபாடு செய்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி பரிசல் துறை ரோடு காவிரி படித்துறையில் ஆடி 18 முன்னிட்டு சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி முளைப்பாரி, தேங்காய், பழங்கள், மஞ்சள், குங்குமம், பச்சை அரிசி, காதோலை கருகமணி, நாவல் பழம் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை காவிரி தாய்க்கு படைத்து வழிபாடு செய்தனர்.
திருமணமான புதுமணத் தம்பதியர் தங்களது திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வணங்கி புதிய மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொண்டனர். மேலும் சுமங்கலி பெண்கள் தாலி கயிற்றை கழட்டி வைத்து வழிபாடு செய்து அதற்கு பொட்டு வைத்து மீண்டும் அணிந்து கொண்டனர். நிகழ்வில் மூத்த பெண்மணியிடம் திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் ஆகியோர் மஞ்சள் கயிறு அணிந்து ஆசி பெற்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர், வருவாய்த்துறையினர் ,நகராட்சியினர், மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் செய்திருந்தனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து காவிரி ஆற்றில் நீராடி காவிரித்தாயை வழிபாடு செய்து சென்றனர்.